மட்டக்களப்பு
மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்கள் இனந்தெரியாத நபர்களால்
உடைத்து நாசமாக்கியதை கண்டித்து சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம்
ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். ஜனாதிபதிக்கு அனுப்பி
வைக்கப்படவுள்ள இந்த மகஜர், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி
வரதலிங்கத்திடம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் இந்து
குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ. சபா வாசுதேவ குருக்கள் மற்றும் ஏனைய
குருமார் ஒன்றிணைத்து கையளித்தனர். 'மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில்
நான்கு இந்து ஆலயங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்
பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்து மக்களை
மிகவும் மன வேதனை அடையச் செய்துள்ளது' என்று அம்மகஜரில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
'இந்த சம்பவமானது, ஒன்றுபட்டு வாழும் பல்வகை மதம் சார்ந்த மக்களை
பிளவுபடுத்தும் நோக்கமாகக் கொண்டது என கருதக்கூடியதாக உள்ளது. கொடிய
யுத்தத்தினை அனுபவித்து அதில் இருந்து முற்று முழுதாக மீளாத நிலையில்
மீண்டும் கலவரத்தினை தூண்டும் வகையில் இச்சம்பவம் நடத்தப்பட்டிருப்பது மிக
வேதனையைத் தருகின்றது. இந்த துரதிஷ்டமான நிகழ்வு இந்துமக்களை மிகவும்
புண்படுத்துவதாக அமைந்துள்ளது' என்றும் அதில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.
'இச்சம்பவங்கள் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பது
தெட்டத்தெளிவாகின்றது. இந்த ஆலயங்களில் நடந்து வரும் திருட்டுக்கள்
ஒருபுறம் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், இச்சம்பவங்கள் மக்களை
மேலும் பதற்றமடையச் செய்வதோடு கடந்த கால யுத்த சூழலையம் எண்ணத்
தோற்றுவிக்கின்றது. இதனை தொடராவண்ணம் உடனடியாக தடுத்து நிறுத்துல்
வேண்டும்.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். மத
வேற்றுமைகளை கழைந்து இந்துக்களின் சுதந்திரமான வழிபாட்டிற்கு வழசமைப்பதோடு
அனைத்து மக்களினதும் வழிபாட்டு சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்கு
மாண்புமிகு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு
அனைத்து இந்து மதகுருமார்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்' என அந்த
மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மகஜரினை உடனடியாக ஜனாதிபதி
செயலகத்திற்கு அனுப்பி வைப்பதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி
வரதலிங்கம் உறுதியளித்தார்.
0 comments:
Post a Comment