Tuesday, June 18, 2013

'கையடக்க தொலைபேசி கட்டணம் 32 இலட்சம் ரூபா'

கையடக்க தொலைபேசி கட்டணமாக 32 இலட்சம் ரூபாவை செலுத்தாத நபர் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கையடக்கதொலை பேசியின் சிம்காட்க்கு ரோமிங் வசதியை பெற்றுக்கொண்ட நபரொருவர் 24 மணித்தியாலயத்திற்குள் 32 இலட்சம் ரூபாவிற்கு பேசியுள்ளமை தொடர்பிலேயே கொழும்பு ஊழல் மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு நேற்று கொண்டுவந்தனர்.

கண்டி, திகனையை பிறப்பிடமாக கொண்ட எம்.முஹமட் மஹ்ரூப் என்பவரே 32 இலட்சம் ரூபாவிற்கான தொலைபேசி கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், 24 மணி நேரத்திற்குள் குறித்த நபர் 501 அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கையடக்க தொலைபேசி நிறுவனம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தது.

சந்தேநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த நபர் சிம்காட்டை இத்தாலியிலுள்ள தன்னுடைய உறவினருக்கு கொடுத்துவிட்டதாகவும் அவர் அந்த சிம்காட் அட்டையை ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒருவர் தன்னுடைய பெயரில் பெற்றுக்கொண்ட சிம்காட் அட்டையை கைமாற்ற முடியாது என்று குறித்த கையடக்கதொலைபேசி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக ஒக்டோபர் 1 ஆம் திகதி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment