வடக்கில்
நெடுஞ்சாலை அபிவிருத்தியென்ற பெயரில் சீனாவிடம் கடனெடுத்து அதில் சீன
அதிகாரிகளை ஈடுபடுத்தி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ஏற்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது என
கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கொழும்பில்
இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர்
மேலும் தெரிவிக்கையில்,வடக்கில் பாரிய நெடுஞ்சாலை அமைப்பதற்கென சீனாவிடம்
இருந்து கடன்பெற்று சீன நாட்டு பொறியியலாளர்களை அவ் அபிவிருத்தியில்
ஈடுபடுத்தியுள்ளதால் அவர்கள் வேறு விதமாக அதனை பயன்படுத்தி இந்தியாவின்
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை உருவாக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அபிவிருத்தி என்ற போர்வையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இது
சந்தர்ப்பமாக அமையும்.
இவ்வாறானதொரு அபிவிருத்தியை வடக்கில் வாழும் பொது மக்களோ அல்லது தமிழ்த்
தேசியக் கூட்டமைப்போ கேட்கவில்லை. வடக்கில் போரால் கணவன்மாரை இழந்த 80
ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் உள்ளனர். அத்துடன் அங்கவீனமான
நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத் தேவைகள்
நிறைவேற்றப்படாதுள்ள நிலையில் வடக்கு மக்களுக்கு அதிவேக நெடுஞ்சாலை
அவசியமில்லை. தற்போது பாவனையில் உள்ள ஏ-9 நெடுஞ்சாலையே அடுத்த 20
வருடங்களுக்கு போதுமானது. ஆகவே இவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீன நாட்டின் உதவியுடன் இடம்பெறும்
அபிவிருத்திகளை கூட்டமைப்பு எதிர்க்கின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment