Friday, May 24, 2013

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு தீக்குளிப்பு / தமிழ் மக்களை வெளியேற்றி சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை / கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கு 3000 பொலிஸார்



கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு தீக்குளிப்பு-கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு ஒருவர் நேற்று தீ குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தீ குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பௌத்த பிக்கு எரிகாங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களை வெளியேற்றி சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை- 
மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார், எமிழ் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் உள்ள அரச காணியினை அத்துமீறி குடியேறி தற்போது குறித்த காணிகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமிழ் நகர் கிராம சேவையாளரினால் கடந்த மாதம் 17 ஆம் திகதி மன்னார் பிரதேசச் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களிடம் அமைத்துள்ள தற்காலிக குடிசைகள் மற்றும் சுற்று வேலிகளை பிரித்து காணியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் உரிய தரப்பினருக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறி தொடர்ந்தும் காணிகளில் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 600 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சாந்திபுரம், சௌத்பார், எமிழ் நகர் போன்ற கிராமங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்காக முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன.
இதனடிப்படையிலேயே எமிழ் நகர் பகுதியில் அரச காணிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தம்மை வெளியேற்றி அந்த காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கு 3000 பொலிஸார்-
வெசாக் பூரணையை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகருக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக மூவாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகரிலுள்ள அனைத்து வெசாக் வலயங்களையும் உள்ளடக்கப்படும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ரோந்து சேவை, போக்குவரத்து வழிகாட்டல்கள், வீதி சோதனை போன்ற நடவடிக்கைகளிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை கைது செய்வதற்காக சிவில் உடையில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment